

புனே,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் -இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை 49.3 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 242 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதில், உலகக்கோப்பையில் அதிக முறை தோல்வியடைந்த அணி என்ற சாதனையைதான் அது படைத்துள்ளது. அதன்படி இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக்கோப்பை தொடரில், அந்த அணி 43 தோல்விகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் 42 தோல்விகளுடன் ஜிம்பாப்வே அணி உள்ளது. இதற்கு அடுத்ததாக 35 தோல்விகளுடன் மேற்கு இந்திய தீவுகள் அணி உள்ளது.