டெல்லி பிரீமியர் லீக்; சிக்சர் மழை பொழிந்த ஆயுஷ் பதோனி - 308 ரன்கள் குவித்த சவுத் டெல்லி

Image Courtesy: @DelhiPLT20
சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் குவித்தது.
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவில் மாநில கிரிக்கெட் வாரியங்களும் டி20 லீக் போட்டிகளை நடத்த ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் முதல் முறையாக டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் டெல்லி பிரீமியர் லீக் என்ற பெயரில் டி20 லீக் போட்டியை இந்த ஆண்டு தொடங்கி உள்ளது.
இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் - நார்த் டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து சவுத் டெல்லி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஸ் ஆர்யா மற்றும் சர்தக் ரே களம் இறங்கினர். இதில் சர்தக் ரே 11 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஆயுஷ் பதோனி களம் இறங்கினர். ஆர்யா - பதோனி இணை அதிரடியாக ஆடியது.
அதிரடியாக ஆடிய இருவரும் சிக்சர் மழை பொழிந்தனர். நார்த் டெல்லி அணியினரின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இதில் பிரியன்ஸ் ஆர்யா 120 ரன் (10 பவுண்டரி, 10 சிக்ஸ்) எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி 19 சிக்சருடன் 165 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இறுதியில் சவுத் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 308 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 309 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த நார்த் டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 112 ரன் வித்தியாசத்தில் சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அபார வெற்றி பெற்றது.






