2027 உலகக் கோப்பை: தொடர்ந்து 3-வது முறையாக நேரடி தகுதி வாய்ப்பை இழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்

14-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி முதல் நவம்பர் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தொடர்ந்து 3-வது முறையாக 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் இழ்ந்துள்ளது.
Published on

சென்னை,

தொடர்ந்து 3-வது முறையாக 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் இழ்ந்துள்ளது.

உலகக் கோப்பை

14-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு 2027 அக்டோபர் 4-ம் தேதி முதல் நவம்பர் 21-ம் தேதி வரை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. 14 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பைக்கான தகுதி விதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

10 அணிகள் நேரடியாக தகுதி

போட்டியை நடத்தும் நாடுகள் என்ற அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் தகுதி பெறுகின்றன. இதனுடன், 2026 செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகளும் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும்.

இதன்படி நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் உலகக் கோப்பையில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

நேரடி வாய்ப்பை இழந்த வெஸ்ட்இண்டீஸ்

தற்போது தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் வெஸ்ட்இண்டீஸ், நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

செப்டம்பர் மாத இறுதியில் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட்இண்டீஸ் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தரவரிசை அடிப்படையில் அந்த அணியால் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தகுதிச்சுற்று

உலகக் கோப்பையில் இடம்பெற வேண்டுமெனில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியாவில் நடைபெறும் தகுதிச்சுற்றில் வெஸ்ட்இண்டீஸ் அணி பங்கேற்க வேண்டும். அந்த தகுதிச்சுற்றில் முதல் 4 இடங்களுக்குள் வந்தால் மட்டுமே 2027 உலகக் கோப்பையின் பிரதான சுற்றுக்கு அந்த அணியால் முன்னேற முடியும்.

தொடர்ந்து 3-வது முறையாக தகுதிச்சுற்று

ஒருகாலத்தில் 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்திய வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலை கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2019 மற்றும் 2023 உலகக் கோப்பைகளிலும் வெஸ்ட்இண்டீஸ் அணி நேரடியாக தகுதி பெறாமல் தகுதிச்சுற்றில் விளையாடியது. குறிப்பாக, 2023-ம் ஆண்டு தகுதிச்சுற்றில் தோல்வியடைந்து முதல்முறையாக உலகக் கோப்பை பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில், 2027 உலகக் கோப்பையிலும் அந்த அணி தொடர்ந்து 3-வது முறையாக தகுதிச்சுற்று பாதையில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com