

லண்டன்,
10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 12ம் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது.
இப்போட்டியியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. இந்திய வீராங்கனைகளில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 68 ரன்களையும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 36 ரன்களையும், ரிச்சா கோஷ் 34 ரன்களையும் குவித்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் சடியா இக்பால், கேப்டன் பாத்திமா சனா அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் வீராங்கனைகள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் பாகிஸ்தான் 17 ஓவரில் 106 ரன்களை மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக ஸ்ரீசரணி 3 விக்கெட்டுகளையும், ஷிபாலி வர்மா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.