இந்திய கிரிக்கெட்டுக்கு விராட் கோலி தேவை - முன்னாள் வீரர் கருத்து

அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக அவரைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பத்ரிநாத் கூறியுள்ளார்.
image courtesy; ICC
image courtesy; ICC
Published on

மும்பை,

இந்திய அணியின் சீனியர் வீரர் விராட் கோலி (வயது 36). இவர் இந்திய அணிக்காக இதுவரை 123 டெஸ்ட், 302 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் கூறியிருந்தார்.

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், கடந்த 7ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்தார்.

இந்நிலையில், இந்திய சீனியர் வீரரான விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்து பி.சி.சி.ஐ-யிடம் தனது கருத்தை கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு விராட் கோலியிடம் பி.சி.சி.ஐ. வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டுக்கு, குறிப்பாக சிவப்பு பந்து வடிவத்தில், விராட் கோலி தேவை என இந்திய முன்னாள் வீரரான சுப்ரமணியம் பத்ரிநாத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்திய கிரிக்கெட்டுக்கு, குறிப்பாக சிவப்பு பந்து வடிவத்தில், விராட் கோலி தேவை. அவரைச் சுற்றி ஒரு இளம் அணியை உருவாக்க உதவ வேண்டும். அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக அவரைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com