அசுதோஷ் அல்ல... இவரால்தான் போட்டி எங்களிடமிருந்து பறிபோனது - ரிஷப் பண்ட்

டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அசுதோஷ் சர்மா 31 பந்தில் 66 ரன்னும், விப்ராஜ் நிகாம் 15 பந்தில் 39 ரன்னும் எடுத்தனர்.
Image Courtesy: @IPL / @DelhiCapitals
Image Courtesy: @IPL / @DelhiCapitals
Published on

விசாகப்பட்டினம்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ - டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 209 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் நிக்கோலஸ் பூரன் 75 ரன், மிட்செல் மார்ஷ் 72 ரன் எடுத்தனர். டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த டெல்லி 65 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களம் புகுந்த அசுதோஷ் சர்மா அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இறுதியில் டெல்லி 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அசுதோஷ் சர்மா 31 பந்தில் 66 ரன்னும், விப்ராஜ் நிகாம் 15 பந்தில் 39 ரன்னும் எடுத்தனர். இந்த ஆட்டத்தின் ஆட்ட நாயகன் விருது அசுதோஷ் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது,

எங்கள் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள், இந்த விக்கெட்டில் இது ஒரு நல்ல ஸ்கோர் என்று நான் நினைக்கிறேன். ஒரு அணியாக ஒவ்வொரு போட்டியிலிருந்தும் நாங்கள் நேர்மறையான விஷயங்களை எடுக்க விரும்புகிறோம், ஒரு அணியாக அதிலிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம். நாங்கள் எவ்வளவு அடிப்படைகளை சரியாகச் செய்கிறோமோ, அவ்வளவுக்கு எதிர்காலத்தில் அது எங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

பந்துவீச்சின் போது தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்தோம், ஆனால் அது பேட்டிங் செய்ய ஒரு நல்ல விக்கெட் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் அடிக்கடி அடிப்படைகளை சரியாகச் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப்களை வைத்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். ஒன்று டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - அசுதோஷ் சர்மா இடையேயும், மற்றொன்று விப்ராஜ் நிகாம் மற்றும் அசுதோஷ் சர்மா இடையேயும் இருந்தது.

இந்த போட்டியில் விப்ராஜ் நிகாம் ஒரு அற்புதமான வேலையை செய்தார். அவரது அந்த அட்டத்தின் காரணமாக இப்போட்டி எங்களிடமிருந்து பறிபோனது. நாங்கள் அழுத்தத்தை உணர்ந்தோம், நாங்கள் இன்னும் நிலைத்து நிற்கிறோம். இந்த ஆட்டத்தில் அதிர்ஷ்டம் நிச்சயம் ஒரு பங்கு வகித்தது. நீங்கள் இவற்றில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com