

சென்னை:
இங்கிலாந்தில் நடைபெறும் ‘தி ஹண்ட்ரெட்’ கிரிக்கெட் லீக் ஏலம் தற்போது இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தலைமையிலான சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி, பாகிஸ்தான் ஸ்பின்னர் அப்ரார் அகமதுவை ரூ.2.3 கோடிக்கு வாங்கியதுதான்.
இதனால் இந்திய ரசிகர்கள் சிலர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா விளக்கம் அளித்துள்ளார்.
“எந்த வெளிநாட்டு லீக்கில் எந்த அணி எந்த வீரரை வாங்க வேண்டும் என்பது எங்களது அதிகார வரம்பில் வராது. எங்களது அதிகாரம் ஐபிஎல் வரை மட்டுமே. மற்ற லீக்குகளில் என்ன நடக்கிறது என்பதில் எங்களால் தலையிட முடியாது. ஐபிஎல்லில் பாகிஸ்தான் வீரர்கள் இல்லை. வெளிநாட்டு லீக்குகளில் யாரை வாங்கினாலும் அது எங்களுக்கு சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல” என்று அவர் கூறினார்.
இந்தியாவில் ஐபிஎல் போல இங்கிலாந்தில் ‘தி ஹண்ட்ரெட்’ கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இங்கிலாந்தில் நடத்தப்படும் இந்த 100 பந்து கிரிக்கெட் தொடர் 2021 முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 16 வரை இங்கிலாந்தின் பல நகரங்களில் நடைபெற உள்ளன.