

பெங்களூரு,
தன்னுடைய கிரிக்கெட் பயணம் தொடங்கிய டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திலேயே, ஐபிஎல் வரலாற்றில் எவரும் எட்டாத 9,000 ரன்கள் என்ற இமயமலைச் சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 15 பந்துகளில் 23* ரன்கள் (1 பவுண்டரி, 2 சிக்ஸர்கள்) எடுத்ததன் மூலம் விராட் கோலி இந்த மைல்கல்லை எட்டினார். ஆட்டத்தின் இறுதியில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், விராட் கோலிக்கு இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து இர்பான் பதான் தனது எக்ஸ் தளத்தில்,"விராட் கோலிக்கு யாராவது சவால் விட முடியும் என்றால், அது விராட் கோலியால் மட்டுமே முடியும். ஐபிஎல் தொடரில், இந்த 9000 ரன்கள் எனும் எவரெஸ்ட் சிகரம் அவருக்கு ஒரு ஆரம்பப் புள்ளி மட்டுமே, அதுவே அவரது முடிவு அல்ல" எனப் பதிவிட்டுள்ளார்.