பாகிஸ்தான் ஒரு அணியே அல்ல - தலைமை பயிற்சியாளர் அதிருப்தி

பாகிஸ்தான் அணியில் வீரர்கள் யாருமே ஒற்றுமையுடன் இல்லை என்று கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

கராச்சி,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் அணியானது 2 வெற்றிகள் மட்டுமே பெற்ற நிலையில் லீக் சுற்றுடன் வெளியேறியது. முதலாவது ஆட்டத்தில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், 2-வது ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. இதனால் கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னெற முடியவில்லை.

இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு சில வாரங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் 20 ஓவர்) அணியின் தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் பொறுப்பேற்றார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கேரி கிறிஸ்டன்.

அதன்பின் தென்னாப்பிரிக்கா அணிக்கு பயிற்சியாளராக இருந்த அவர், ஐபிஎல் தொடரில் ஏராளமான அணிகளுடன் பணியாற்றி வருகிறார். அவரது பயிற்சியின் கீழ் பாகிஸ்தான் எழுச்சிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருடைய தலைமையிலும் எந்த முன்னேற்றத்தையும் சந்திக்காத பாகிஸ்தான் முதல் சுற்றுடன் வெளியேறியது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் வீரர்கள் யாருமே ஒற்றுமையுடன் இல்லை என்று கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். அதனால் இதற்கு முன் இந்தியா போன்ற அணிகளில் வேலை செய்த தாம் பாகிஸ்தான் போன்ற அணியை பார்த்ததில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை. பொதுவாக நீங்கள் உங்களை ஒரு அணி என்று சொல்வீர்கள். ஆனால் அது (பாகிஸ்தான்) ஒரு அணியல்ல. ஏனெனில் நீங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுப்பதில்லை. ஒவ்வொருவரும் பிரிந்துள்ளனர். நான் பல அணிகளுடன் வேலை செய்துள்ளேன். ஆனால் இது போன்ற சூழ்நிலையை பார்த்ததில்லை. எந்த சூழ்நிலைக்கு எந்த ஷாட்டை அடிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. எனவே இனிமேல் அந்த இடங்களில் முன்னேறுபவர்கள் மட்டுமே அணியில் சேர்க்கப்படுவார்கள். மற்றவர்கள் நீக்கப்படுவார்கள்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com