ஹாரிஸ் ரவூப் காயம் குறித்து விளக்கம் அளித்த பி.சி.பி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஹாரிஸ் ரவூப் விளையாடுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Image Courtesy: AFP / Haris Rauf
Image Courtesy: AFP / Haris Rauf
Published on

கராச்சி,

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் 78 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. இப்போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் 6.2 ஓவர்களை மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். மேற்கொண்டு பேட்டிங்கின் போதும் அவர் களம் இறங்கவில்லை.

இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் ஹாரிஸ் ரவூப் விளையாடுவாரா என்ற சந்தேகங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில் ஹாரிஸ் ரவூபின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) வழங்கியுள்ளது. இதுகுறித்து பி.சி.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

எம்.ஆர்.ஐ மற்றும் எக்ஸ்ரே ஸ்கேன் பரிசோதனை முடிவில், ஹாரிஸ் ரவூபிற்கு காயம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது காயம் பெரியதல்ல. மேலும், வரும் 19ம் தேதி அன்று கராச்சியில் தொடங்கும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் அவர் முழுமையாக குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனது காயத்தில் இருந்து குணமடையும் வகையில், வரும் 12-ம் தேதி நடைபெறும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட மட்டார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com