தயவு செய்து பும்ராவை என்னுடன் ஒப்பிட வேண்டாம் - காரணத்துடன் விளக்கிய இந்திய முன்னாள் கேப்டன்

பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் பும்ரா 32 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார்.
தயவு செய்து பும்ராவை என்னுடன் ஒப்பிட வேண்டாம் - காரணத்துடன் விளக்கிய இந்திய முன்னாள் கேப்டன்
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தற்சமயம் உலகின் நம்பர் 1 பவுலராக போற்றப்படுகிறார். வித்தியாசமான ஆக்சனில் பந்துவீசி எதிரணிகளை திணறடித்து வரும் அவர், இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

மேலும் சமீபத்தில் முடிவடைந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பையிலும் அசத்தலாக பந்துவீசி 32 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தியிருந்தார். இதையும் சேர்த்து ஆஸ்திரேலியாவில் அவர் வீழ்த்திய விக்கெட் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலரான கபில்தேவின் (51 விக்கெட்) சாதனையை முறியடித்தார். அதனால் அவரை பல தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக பார்க்கப்படும் ஜஸ்பிரித் பும்ராவை என்னுடன் யாரும் ஒப்பிட வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் கூறியுள்ளார்.

இதற்கான காரணம் குறித்து பேசிய அவர் கூறுகையில், "தயவுசெய்து பும்ராவை என்னுடன் யாரும் ஒப்பிட வேண்டாம். ஏனெனில் ஒரு தலைமுறையை சேர்ந்த வீரரை மற்றொரு தலைமுறை வீரருடன் ஒப்பிடுவது என்னை பொறுத்தவரை தவறு. ஏனெனில் தற்போதுள்ள வீரர்கள் ஒரு நாளில் 300 ரன்கள் கூட அடிக்கும் அளவிற்கு இருக்கிறார்கள். ஆனால் எங்களுடைய காலத்தில் அப்படி நடந்தது கிடையாது. அதேபோன்று அப்போதைய கிரிக்கெட்டுக்கும் இப்போதைய கிரிக்கெட்டுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. இதனால் யாரையும் யாருடனும் ஒப்பிட வேண்டாம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com