தரம் நிரந்தரமானது.. பார்ம் தற்காலிகமானது - விராட், ரோகித் குறித்து இலங்கை முன்னாள் வீரர்


தரம் நிரந்தரமானது.. பார்ம் தற்காலிகமானது - விராட், ரோகித் குறித்து இலங்கை முன்னாள் வீரர்
x

விராட், ரோகித் குறித்து முத்தையா முரளிதரன் சில கருத்துகள் கூறியுள்ளார்.

மும்பை,

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த தொடரில் முன்னணி வீரர்களான ரோகித் மற்றும் விராட் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் கெரியரின் இறுதி கட்டத்தில் இருக்கும் இருவரும் சமீப காலமாக பார்மின்றி தவித்து வருகின்றனர். இதனால் இந்த தொடரில் எழுச்சி பெற்று கோப்பையை வென்று கொடுப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இவர்களில் ரோகித் சர்மா தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார். இதனால் விராட் கோலி மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார்.

இந்நிலையில் இலங்கை முன்னாள் வீரரான முரளிதரன் சமீபத்திய பேட்டியில் விராட், ரோகித் குறித்து சில கருத்துகளை கூறியுள்ளார்.

அதில், "ரோகித் சர்மாவும், விராட் கோலியும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒரு வீரரின் தரம் நிரந்தரமானது, பார்ம் என்பது தற்காலிகமானது என்று எப்போதும் சொல்வேன். எனவே அவர்கள் பேட்டிங் பார்முக்கு வர வேண்டும். ரோகித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்து பார்முக்கு வந்துள்ளார். இதே போல் கோலியும் பார்முக்கு வந்துவிடுவார். சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு இருவரும் பேட்டிங்கில் அசத்த வேண்டியது அவசியமாகும்" என்று கூறினார்.

1 More update

Next Story