ரிஸ்வான் அரைசதம்; கனடாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரிஸ்வான் 53 ரன்கள் எடுத்தார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கனடா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. கனடா தரப்பில் அதிகபட்சமாக ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர், ஹாரிஸ் ராப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் புகுந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சைம் அயூப் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அயூப் 6 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து கேப்டன் பாபர் அசாம் களம் புகுந்தார். பாபர் - ரிஸ்வான் இருவரும் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதில் பாபர் அசாம் 33 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய பக்கார் ஜமான் 4 ரன்னில் அவுட் ஆனார்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய முகமது ரிஸ்வான் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 107 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரிஸ்வான் 53 ரன்கள் எடுத்தார்.

கனடா தரப்பில் தில்லன் ஹெய்லிகர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பில் பாகிஸ்தான் அணி நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com