சுனில் நரேன் ஒரு லெஜெண்ட்...அவருடன் இணைந்து பந்துவீசுவது மகிழ்ச்சி அளிக்கிறது - வருண் சக்ரவர்த்தி

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
image courtesy; AFP 
image courtesy; AFP 
Published on

மும்பை,

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 169 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 70 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் நுவான் துஷாரா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி ஆடியது.

ஆனால் மும்பை அணி வீரர்கள் கொல்கத்தாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் மும்பை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் கொல்கத்தா அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் அபாரமாக பேட்டிங் ஆடிய வெங்கடேஷ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த போட்டி முடிந்த பின்னர் கொல்கத்தா வீரர் வருண் சக்ரவர்த்தி அளித்த பேட்டியில் கூறியதாவது, 12 வருடங்களாக வெற்றி பெறாத வான்கடேவில் தற்போது வென்றுள்ளது நல்ல உணர்வை கொடுக்கிறது. டிம் டேவிட் பேட்டிங் செய்த போது வெறும் ஒரு விக்கெட் மட்டுமே வெற்றியின் குறுக்கே இருந்தது.

170 ரன்கள் கட்டுப்படுத்துவதற்கு போதுமான இலக்கு அல்ல. இரவு நேரத்தில் பனி இருந்தது. ஆனால் நாங்கள் எங்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு விளையாடினோம். இப்போட்டிக்காக நாங்கள் விரிவாக திட்டமிட்டது பலனளித்தது. பனியின்  காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்பின்னர்களுக்கு பெரிய உதவி கிடைக்கவில்லை.

பிட்ச்சில் பந்து நின்று வருவதாக எங்களுடைய பேட்ஸ்மேன்கள் எங்களிடம் சொன்னார்கள். ஆனால் நான் பந்து வீச வந்த போது அப்படி எதுவும் இல்லை. சுனில் நரேன் ஒரு லெஜெண்ட். தொடர்ந்து ஒரே மாதிரியாக பந்து வீசும் அவருடன் சேர்ந்து நான் பந்து வீசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல் இன்னிங்ஸில் வெங்கடேஷ் மற்றும் பாண்டே ஆகியோர் சேர்ந்து தோளில் சுமந்து வந்த இப்போட்டியில் வென்றது சிறப்பானது. பஞ்சாப்புக்கு எதிராக அதிக ரன்கள் கொடுத்து சந்தித்த தோல்விக்குப்பின் நாங்கள் கம்பேக் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com