ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான சூர்யவன்ஷி... கூகுள் சி.இ.ஓ வெளியிட்ட அதிரடி பதிவு

Image Courtesy:@IPL/ @rajasthanroyals / PTI
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் ஆனார்.
வாஷிங்டன்,
ஐ..பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 66 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 178 ரன் மட்டுமே எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 74 ரன் எடுத்தார். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக ஆடவில்லை அவருக்கு பதிலாக ரியான் பராக் அணியை வழிநடத்தினார்.
மேலும், இந்த போட்டியில் ராஜஸ்தான் தரப்பில் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி களம் இறங்கினார். அவர் 20 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதில் 2 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் இளம் வயதில் அறிமுகம் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையை சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து பலரும் தங்களது வியப்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது வியப்பை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இன்று நான் அதிகாலை எழுந்து எட்டாவது படிக்கும் சிறுவன் ஐ.பி.எல் விளையாடுவதைப் பார்த்தேன். என்ன மாதிரியான அறிமுகம் இது என பதிவிட்டுள்ளார். வைபவ் சூர்யவன்ஷியை பற்றி கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளிப்படுத்திய பதிவு வைரலாகி வருகிறது.






