இந்தியாவுக்கு எதிராக இலங்கை தோல்வியடைய காரணம் இதுதான் - பாக். முன்னாள் வீரர் விமர்சனம்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இலங்கை இழந்தது.
இந்தியாவுக்கு எதிராக இலங்கை தோல்வியடைய காரணம் இதுதான் - பாக். முன்னாள் வீரர் விமர்சனம்
Published on

கராச்சி,

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 43 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே  கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் புதிய கேப்டன் சூர்யகுமார் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் தலைமையில் இந்தியா வெற்றி நடை போட தொடங்கியுள்ளது.

மறுபுறம் புதிய கேப்டன் அசலன்கா மற்றும் பயிற்சியாளர் ஜெயசூர்யா தலைமையில் இலங்கை எந்த முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை. ஏனெனில் அந்த அணி சமீப காலங்களாகவே தடுமாறி வருகிறது.

இந்நிலையில் உலக சாம்பியன் இந்தியாவுக்கு எதிராக இத்தொடரில் வெற்றிக்கான விழிப்புணர்வு மற்றும் பொறுப்பு இல்லாமல் விளையாடியதே இலங்கை அணியின் தோல்விக்கான காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "2-வது போட்டியில் இலங்கை கடைசி 5 ஓவர்களில் 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. அதனால் 190 ரன்கள் எடுப்பதற்கு தயாராக இருந்த அவர்கள் கடைசியில் 161 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அந்த தோல்விக்காக அவர்கள் தங்களை தாங்களே குறை சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்கள் பொறுப்பை எடுத்து விளையாடவில்லை. குறிப்பாக ஹசரங்கா மற்றும் சனகா அவுட்டான விதம் பள்ளிக் குழந்தைகள் விளையாடுவதுபோல தெரிந்தது. இலங்கை அணியில் போட்டி விழிப்புணர்வு மற்றும் பொறுப்பு ஆகியவை காணவில்லை" என்று கூறினார்.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com