

திண்டுக்கல்,
திண்டுக்கல் அணியை வீழ்த்தி மதுரை 4-வது வெற்றியை பதிவு செய்தது.
10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெற்ற 15வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் - மதுரை அணிகள் மோதின. இப்போட்டி மழை காரணமாக 18 ஓவர்களாக குறைக்கப்பட்டநிலையில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 18 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் களமிறங்கியது.
அந்த அணியில் தொடக்க வீரர் சிவம் சிங் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். வி.கே. வினீத் 19 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். ஹன்னி சைனி 14 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். எனினும், இலக்கை எட்ட முடியாமல் திண்டுக்கல் அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் மதுரை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மதுரை அணி நடப்பு டிஎன்பிஎல் தொடரில் தனது 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.