முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: வைபவ் சூர்யவன்சி அதிரடி... இலங்கை ’ஏ’க்கு 378 ரன்கள் இலக்கு

வைபவ் சூர்யவன்சி 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: வைபவ் சூர்யவன்சி அதிரடி... இலங்கை ’ஏ’க்கு 378 ரன்கள் இலக்கு
Published on

தம்புல்லா,

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை ’ஏ’ அணிக்கு இந்தியா ’ஏ’ அணி 378 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இறுதிப்போட்டி

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா-ஏ, ஆப்கானிஸ்தான்-ஏ மற்றும் இலங்கை-ஏ அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா-ஏ மற்றும் இலங்கை-ஏ அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இன்று தம்புல்லாவில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை-ஏ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

வைபவ் சூர்யவன்சி புயல் வேக ஆட்டம்

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய இந்தியா-ஏ அணியின் தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்சி மற்றும் பிரியான்ஷ் ஆர்யா களமிறங்கினர். தொடக்கம் முதலே இலங்கை பந்துவீச்சாளர்களை இருவரும் சிக்சர்கள், பவுண்டரிகள் மூலம் திணறடித்தனர். அதில் அதிரடியில் மிரட்டிய வைபவ் சூர்யவன்சி, வெறும் 11 பந்துகளில் அரைசதம் விளாசி புதிய சாதனை படைத்தார். தொடர்ந்து அதே வேகத்தில் விளையாடிய அவர், 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் பிரியான்ஷ் ஆர்யா 29 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

திலக் வர்மா அரைசதம்

இதன்பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் திலக் வர்மா இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ருதுராஜ் கெய்க்வாட் 51 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து குமார் குஷாக்ரா களமிறங்கி திலக் வர்மாவுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடினார். திலக் வர்மா தனது அரைசதத்தை பூர்த்தி செய்து 90 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து குமார் குஷாக்ரா 39 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

400 ரன்களை தொட்ட இந்தியா-ஏ

இறுதிக்கட்டத்தில் நிஷாந்த் சிந்து மற்றும் விப்ராஜ் நிகம் ஜோடி அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதன் மூலம் 44-வது ஓவரில் இந்தியா-ஏ அணி 300 ரன்களை கடந்தது. தொடர்ந்து இருவரும் ஸ்கோரை உயர்த்தி வந்தநிலையில், நிஷாந்த் சிந்து 16(18) ரன்களிலும், விப்ராஜ் நிகம் 27(20) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

378 ரன்கள் இலக்கு

இறுதி ஓவர்களில் அனுகுல் ராய் அதிரடி காட்ட 39(15), நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா-ஏ அணி 9 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் குவித்தது. இதையடுத்து முத்தரப்பு ஒருநாள் தொடரின் கோப்பையை கைப்பற்ற இலங்கை-ஏ அணி 378 ரன்கள் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com