ராஜஸ்தானுக்கு எதிரான சதம் - ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த விராட் கோலி

பெங்களூரு தரப்பில் விராட் கோலி 72 பந்தில் 113 ரன்கள் அடித்தார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ஜெய்ப்பூர்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் விராட் கோலி 72 பந்தில் 113 ரன்கள் அடித்தார். இதையடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 189 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் 58 பந்தில் 100 ரன்னும், சஞ்சு சாம்சன் 42 பந்தில் 69 ரன்னும் எடுத்தனர். ஆர்.சி.பிக்கு எதிராக பட்லர் நேற்று அடித்த சதத்தின் மூலம் ஐ.பி.எல் தொடரில் தன்னுடைய 100-வது போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதையடுத்து இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி சதம் அடித்த ஜோஸ் பட்லருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய கோலி 67 பந்துகளில் சதத்தை எட்டினார். இந்த சதம் ஐ.பி.எல்-லில் கோலியின் 8வது சதமாகும்.

67 பந்துகளில் சதம் கண்ட விராட் கோலி மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஐ.பி.எல் வரலாற்றில் மிக மெதுவான சதம் அடித்த வீரர் என்ற மோசமான சாதனை பட்டியலில் மணிஷ் பாண்டேவுடன் விராட் கோலி இணைந்துள்ளார்.

ஐ.பி.எல்-லில் மிக மெதுவாக சதம் அடித்த வீரர்கள் :

விராட் கோலி - 67 பந்துகள்

மணீஷ் பாண்டே - 67 பந்துகள்

சச்சின் டெண்டுல்கர் - 66 பந்துகள்

டேவிட் வார்னர் - 66 பந்துகள்

ஜோஸ் பட்லர் - 66 பந்துகள்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com