

மும்பை,
வைபவ் சூர்யவன்ஷி போன்ற வீரர் 3 பார்மேட்டிலும் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ‘15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐபிஎல் தொடர் மூலம் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அனுபவம் கிடைப்பது நல்ல விஷயம். அதே நேரத்தில், இந்திய உள்நாட்டு தொடர்களில் சிகப்புப் பந்து போட்டிகளில் விளையாடி தனது திறனை மேலும் வளர்த்துக்கொள்ள அவருக்கு போதிய நேரம் அளிக்கப்பட வேண்டும்’ என்றார்.
மேலும், ’வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருவதை போலவே, எதிர்காலத்தில் சிகப்புப் பந்து கிரிக்கெட்டிலும் அவர் சிறப்பாக செயல்பட்டால், அது இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல், உலக கிரிக்கெட்டுக்கே மகிழ்ச்சியளிக்கும் விஷயம்’ என்றும் தெரிவித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி இதுவரை 8 முதல்தர போட்டிகளில் விளையாடி, 17.25 சராசரி வைத்துள்ளார். விரைவில் தொடங்க உள்ள துலீப் டிராபி தொடரில் கிழக்கு மண்டல அணிக்காக விளையாட உள்ள அவர், அதன் மூலம் சிகப்புப் பந்து கிரிக்கெட்டில் தனது அனுபவத்தை மேலும் அதிகரிக்க உள்ளார்.