ரோகித் அதிரடியாக விளையாடுவதையே விரும்புகிறோம் - மும்பை பயிற்சியாளர்

Image Courtesy: @IPL / @ChennaiIPL / @mipaltan
சென்னைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா 45 பந்தில் 76 ரன்கள் எடுத்தார்.
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் கடந்த 20ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 45 பந்தில் 76 ரன் எடுத்தார்.
நடப்பு தொடரின் தொடக்க ஆட்டங்களில் பார்ம் இன்றி தவித்த ரோகித் சர்மா சென்னைக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இந்நிலையில், ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவதையே விரும்புகிறோம் என மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினால், ஆட்டத்தில் மாற்றம் ஏற்படும். அவர் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை கொடுக்கும்போது, அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் நம்பிக்கை அதிகரிக்கும். அதனால், அவர் அதிரடியாக விளையாடுவதையே நாங்கள் விரும்புகிறோம். அதிரடியாக விளையாடும் அணுகுமுறையில் அவர் ஒருபோதும் மாற்றம் செய்யவில்லை.
குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தபோதும், முதல் போட்டியிலிருந்தே அவர் அதிரடியாக விளையாடி வருகிறார். அணிக்காக அவர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க விரும்புகிறார். அணி நிர்வாகமும் அதனையே விரும்புகிறது. அவர் அதிரடியாக விளையாடுவதற்கு அணி நிர்வாகம் முழு ஆதரவையும் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.






