மகளிர் ஒருநாள் கிரிக்கெட்; தீப்தி சர்மா அபார பந்துவீச்சு...வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களில் ஆல் அவுட்

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Image Courtesy: @BCCIWomen
Image Courtesy: @BCCIWomen
Published on

வதோதரா,

வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வதோதராவில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கியானா ஜோசப் மற்றும் ஹேலி மேத்யூஸ் களம் இறங்கினர். இருவரும் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய டியான்ட்ரா டாட்டின் 5 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து ஷெமைன் காம்பெல்லே மற்றும் சினெல்லே ஹென்றி ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் சினெல்லே ஹென்றி அரைசதம் அடித்த நிலையில் 61 ரன்னிலும், ஷெமைன் காம்பெல்லே 46 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இதில் ஜைதா ஜேம்ஸ் 1 ரன், ஆலியா அலீன் 21 ரன், மாண்டி மங்ரு 9 ரன், அபி பிளெட்சர் 1 ரன், அஷ்மினி முனிசர் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 38.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 162 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய தீப்தி சர்மா 6 விக்கெட், ரேனுகா சிங் 4 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com