மகளிர் டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை

image courtesy:twitter/@ICC
இலங்கை தரப்பில் அதிகபட்சமாக சமாரி அத்தபத்து 64 ரன்கள் அடித்தார்.
கிறிஸ்ட்சர்ச்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு மகளிர் அணிக்கெதிராக தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 18.5 ஓவர்களில் 101 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக எம்மா மெக்லியோட் 44 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் மல்கி மாதரா 3 விக்கெட்டுகளும், பிரியதர்ஷினி மற்றும் கவிஷா தில்ஹாரி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 102 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 102 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சமாரி அத்தபத்து 64 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் ஜெஸ் கெர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.






