அர்ஜென்டினாவுக்கு எதிராக உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் -ரோட்ரி

நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அர்ஜென்டினாவுக்கு எதிராக  உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் -ரோட்ரி
Published on

நியூஜெர்சி,

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நாளை அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டியில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோட்ரி அளித்த பேட்டியில்,

'நாங்கள் படிப்படியாக வளர்ந்து வருகிறோம். நாங்கள் களத்தில் செய்து வருவதை தொடர்ந்து செய்ய வேண்டும். ஏனெனில் இது கடந்த 5 ஆண்டுகளாக ஒரு செயல்முறையாக இருந்து வருகிறது. இந்த உலகக் கோப்பை போட்டிக்கு வரும் போதே எங்களது இலக்கு கோப்பையை வெல்வது தான். அதனை எங்களால் அடைய முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். எங்களுடைய இந்த அணியால் சிறந்த எதிரணிகளை தோற்கடிக்க முடியும் என்பதை காட்டியிருக்கிறோம். இறுதிப்போட்டி மிகவும் வித்தியாசமான ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது உடல் ரீதியாக மிகவும் கடினமான போட்டியாக இருக்கும். அதற்கு தயாராக இருக்க வேண்டும். சூழ்நிலைக்கு தகுந்தபடி எந்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். தற்காப்பு, எதிர்தாக்குதல், தாக்குதல் என அனைத்து வகையான ஆட் டத்திற்கும் ஏற்ப எங்களை தகவமைத்து கொள்ள முடியும். நாங்கள் அனைத்து விதமான திறமை களும் நிறைந்த அணி. அதனால் தான் இங்கு இருக்கிறோம். பிரான்சுக்கு எதிரான அரையிறுதியில் ஒரு அணியாக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால் அர்ஜென்டினாவுக்கு எதிராக அதனை விட உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் உலக சாம்பியன். எங்களால் தரமான ஆட்டத்தை வெளிக்காட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com