

கிளாஸ்கோ,
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர். அரையிறுதிக்கு 10 வீரர், வீராங்கனைகள் முன்னேறியதன் மூலம், இந்தியாவுக்கு குத்துச்சண்டை பிரிவில் மட்டும் 10 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.
1934-ஆம் ஆண்டு முதல் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று வரும் இந்தியா, குத்துச்சண்டை பிரிவில் ஒரே தொடரில் 10 பதக்கங்களை உறுதி செய்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 2018 கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் 9 பதக்கங்களும், 2022 பர்மிங்ஹாம் போட்டியில் 7 பதக்கங்களும் வென்றதே இந்தியாவின் சாதனையாக இருந்தது.
அரையிறுதிக்கு முன்னேறும் ஒவ்வொரு வீரருக்கும் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் உறுதி செய்யப்படும். அந்த வகையில், 10 இந்திய வீரர், வீராங்கனைகள் அரையிறுதியை எட்டியதன் மூலம் 10 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.
பெண்கள் பிரிவில் 75 கிலோ எடைப்பிரிவில் லவ்லினா போர்கோஹெய்ன் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார். தொடர்ந்து 54 கிலோ பிரிவில் பிரீதி பவார், 60 கிலோ பிரிவில் பிரியா கங்காஸ் ஆகியோரும் அரையிறுதிக்குள் நுழைந்தனர்.
மேலும், 51 கிலோ பிரிவில் சாக்சி சவுத்ரி, 70 கிலோ பிரிவில் அருந்ததி சவுத்ரி மற்றும் 57 கிலோ பிரிவில் ஜாஸ்மின் லம்போரியா ஆகியோர் வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்தனர்.
ஆண்கள் பிரிவில் 55 கிலோ எடைப்பிரிவில் ஜதுமணி சிங், ஜாம்பியா வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 60 கிலோ பிரிவில் சச்சின் சிவாச், போட்ஸ்வானா வீரரை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து பதக்கத்தை உறுதி செய்தார்.
80 கிலோ பிரிவில் அங்குஷ் பங்கால், சீஷெல்ஸ் வீரர் ஜேட் மிசாக்கை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். 90+ கிலோ எடைப்பிரிவில் நரேந்தர் பெர்வால், சாமோவா வீரருக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவின் 10-வது பதக்கத்தை உறுதி செய்தார்.
அரையிறுதிக்கு முன்னேறியுள்ள 10 இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளும் தற்போது தங்கப் பதக்கத்தை இலக்காகக் கொண்டு களமிறங்க உள்ளனர். இதனால், இந்த முறை காமன்வெல்த்தில் இந்தியாவின் குத்துச்சண்டை பிரிவு போட்டிகள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.