கோவிஷீல்டு தடுப்பூசி லேசாக பக்க விளைவுகளை தரும்; நிறுவனம் ஒப்புதல்


கோவிஷீல்டு தடுப்பூசி லேசாக பக்க விளைவுகளை தரும்; நிறுவனம் ஒப்புதல்
x
தினத்தந்தி 30 April 2024 5:47 AM GMT (Updated: 30 April 2024 5:55 AM GMT)

ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் கோர்ட்டில் அளித்துள்ள ஆவணங்களில், கோவிஷீல்டு தடுப்பூசியால், மிக அரிய வகையாக டி.டி.எஸ். என்ற பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தது.

லண்டன்,

இந்தியாவில், கொரோனா நோய்த்தொற்று பரவியபோது, அதனை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அந்த வகையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.

கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. இதன் செயல்திறன் 81 சதவீதம் என தெரிவிக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்தது. இதன் செயல்திறன் 70 சதவீதம் என அப்போது தெரிவிக்கப்பட்டது.

நம்முடைய நாட்டில் கோடிக்கணக்கானோர் இந்த இரு வகை தடுப்பூசிகளை அதிகம் பயன்படுத்தினர். இவற்றில், கோவிஷீல்டு தடுப்பூசியே இந்தியாவில் பரவலாக தட்டுப்பாடின்றி கிடைத்தது. இதுபோக, 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவில் வீணாகிவிட்டன என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர் மரணங்களும் மற்றும் கடுமையான காயங்களும் நிறைய பேருக்கு ஏற்பட்டு உள்ளன என புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்து ஐகோர்ட்டில் இதற்கு எதிராக 51-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. ரூ.1,047 கோடி வரை இழப்பீடு தொகை தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதில், ஜேம்ஸ் ஸ்காட் என்ற முதல் புகார்தாரர் கூறும்போது, 2021 ஏப்ரல் மாதத்தில் இந்த தடுப்பூசியை போட்ட பின்னர், ரத்த உறைதல் ஏற்பட்டது. மூளையில் காயம் ஏற்பட்டது. இதனால், வேலை செய்ய முடியாமல் போனது என கூறியுள்ளார். 3 முறை அவருடைய மனைவியிடம் மருத்துவமனை நிர்வாகம், அவர் மரணிக்க போகிறார் என கூறியுள்ளது என்று அந்த புகாரில் தெரிவித்து இருக்கிறார்.

இந்த சூழலில், ஆஸ்டிராஜெனேகா நிறுவனம் கோர்ட்டில் அளித்துள்ள ஆவணங்களில், மிக அரிய வகையாக டி.டி.எஸ். என்ற பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தது. இந்த டி.டி.எஸ். பாதிப்பால், ரத்த உறைதல் ஏற்படுவதுடன், மனிதர்களின் ரத்தத்தில் ரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறைவும் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.

கடந்த 2023-ம் ஆண்டு இந்நிறுவனம் கூறும்போது, இந்த தடுப்பூசியால் டி.டி.எஸ். பாதிப்பு ஏற்படுகிறது என நாங்கள் ஏற்று கொள்ள முடியாது என்று ஸ்காட்டின் வழக்கறிஞர்களிடம் தெரிவித்து இருந்தது. ஆனால், அவருடைய வழக்கறிஞர்கள் இந்த தடுப்பூசியானது பாதிப்பு ஏற்படுத்த கூடியது மற்றும் அதன் திறன் பற்றி மிகைப்படுத்தி கூறப்பட்டது என்று குற்றச்சாட்டாக கூறினர்.

இந்த சூழலில், கோவிஷீல்டு தடுப்பூசியானது லேசாக பக்க விளைவுகளை தரும் என அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

நம்முடைய நாட்டில், மிக இளம் வயதில் திடீரென இளைஞர்கள், இளம்பெண்கள் பலர், ஜிம், திருமண விருந்து, திருவிழாக்கள் போன்ற பல்வேறு இடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பின்னரே இந்த நிலை காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்தது. இந்த சூழலில், தடுப்பூசி நிறுவனத்தின் ஒப்புதல் பற்றிய தகவல் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story