காரைக்கால்,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் கடந்த 6-ந்தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் திரளான பக்தர்கள், அரசியல், சினிமா பிரபலங்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி விழா முடிந்து 3-ம் நாளான நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் சனீஸ்வரர் பகவான் கோவிலுக்கு வந்தார். சனீஸ்வரர் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்று வழிபட்டார்.
மேலும் கோவிலில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். கோவில் யானை பிரக்ருதியிடம் அவர் ஆசி பெற்றார். அப்போது கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவருடன் செல்பி எடுக்க சூழ்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவிலை விட்டு வெளியே வந்த சிவகார்த்திகேயன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள். பெண்கள் குறித்து எடுத்த 'தாய் கிழவி' திரைப்படத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். மகிழ்ச்சியாக உள்ளதாகவும், அந்த படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றி பெற்றிருப்பதாகவும், எல்லா அப்பத்தாக்களுக்கும், அம்மாச்சிகளுக்கும், ஆத்தாக்களுக்கும், பாட்டிகளுக்குமான படம். கமல் தயாரிப்பில் உருவாகும் தான் நடிக்கும் அடுத்த படம் சேயோன், அடுத்த மாதம் தொடங்க உள்ளது” என தெரிவித்தார்.