புதுடெல்லி
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரெஹானா குரல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறவினர் மீனா ஹாரிஸ்,நடிகை மியா கலிஃபா, உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.
விவசாயிகளின் போராட்டங்களை ஆதரிக்கும் வெளிநாட்டு பிரபலங்களை பொறுப்புடன் டுவீட் செய்யுங்கள் என இந்தியா கூறி இருந்தது.
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு அமெரிக்காவின் பிரபல பாடகி ரெஹானாவின் ஆதரவை அடுத்து ஹாலிவுட் மூத்த நடிகை சூசன் சரண்டனும் தனது ஆதரவை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஸ்பீட் ரேசர், தி மெடலர், ஏ பேட் மாம்ஸ் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹாலிவுட் மூத்த நடிகையும் சமூக ஆர்வலருமான
சூசன் சரண்டன் (74), தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள்? என்ற தலைப்பில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை பதிவிட்டு, இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஒற்றுமையுடன் நிற்பதாகவும் மேலும் அதுகுறித்த செய்தியை வாசிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்ததாவது, வெளிநாட்டுப் பிரபலங்கள் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் முன்பு உண்மை அறிந்து பேச வேண்டும். மேலும் அவர்கள் பேசுவது ஆதாரமற்றது மட்டுமில்லாமல் பொறுப்பற்றதாகும். டுவிட்டரில் அவர்களின் டுவீட்கள் இந்தியாவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனக் கூறினார்.
நடிகை ஜமீலா ஜமீலும் இன்ஸ்டாகிராம் பதிவில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து லில்லி சிங், ஜே சீன் மற்றும் அமண்டா செர்னி போன்ற நட்சத்திரங்களும் போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கினர்