பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாற்றில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த வருட தீமிதி திருவிழா, கடந்த 8ஆம் தேதி இரவு கம்பம் நடப்பட்டு தொடங்கியது. 9ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 22ஆம் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்சியும், அக்னிசட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்வான தீமிதி நிகழ்ச்சி நேற்று (23ஆம் தேதி) நடைபெற்றது. இதற்காக நேற்று மதியம் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர், கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த 62 அடி நீளம், 6 அடி அகலம் கொண்ட பூக்குண்டத்தில் இறங்கி தீமிதித்தும், பெண்கள் பூ வாரிப் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை மனமுருகி வழிபட்டனர்.
இன்று 24ஆம் தேதி கிடா வெட்டும் நிகழ்ச்சி, அலகு குத்துதல், கரும்பு தொட்டில் போன்ற நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை 25ஆம் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.