கோத்தகிரி,
நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பழங்குடியினர் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகம் ஆகியவை சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் கோத்தகிரியில் நடைபெற்றது. முகாமை வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேல் தொடங்கி வைத்தார். தொழில்நெறி வழிகாட்டும் அலுவலர் கஸ்தூரி, தாசில்தார் மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி மட்டுமின்றி கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 30 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அதில் 173 பேர் கல்வி தகுதி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேவையான தனியார் நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை உதவி கலெக்டர் ரஞ்சித் சிங் கலந்துகொண்டு வழங்கினார்.
முகாம் குறித்து நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வடிவேல் கூறியதாவது:- நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 68 ஆயிரத்து 357 பேர் வேலைக்கு பதிவு செய்து உள்ளனர். இதில் பெரும்பாலானோர் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பதிவை தொடர்ந்து புதுப்பித்து வருகின்றனர். தனியார் துறையிலும் வேலை பெற பதிவுதாரர்களை ஊக்குவிக்கும் விதமாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மாத்திற்கு ஒருமுறை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக பல்வேறு திறன் எய்தும் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு உதவி மையத்தில் வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவுகள் மேற்கொள்ளுதல், வழிகாட்டும் தகவல்கள் அளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வாய்ப்புக்களை படித்த இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.