மயிலாடுதுறை,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மதிக்காமல் மோட்டார் சைக்கிள்களிலும், சைக்கிள்களிலும், நடந்தும் சென்றும் டீ விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர்.
டீ விற்ற 27 பேர் கைது
அதன்படி மயிலாடுதுறை நகரத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களில் சென்று டீ விற்பனையில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள் உள்பட 16 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் கொரோனா விதிமுறையை மீறியதற்கான அபராத தொகையை செலுத்திய பிறகு விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோவில், பெரம்பூர், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களிலும், நடந்து சென்றும் டீ விற்பனையில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள் உள்பட 23 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆக மொத்தம் காரோனா விதிமுறைகளை மீறி டீ விற்பனையில் ஈடுபட்ட 27 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.