சென்னை:
பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர் பாபு, நே.சிற்றரசு, மாதவரம் சுதர்சனம், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்து மரியாதை செலுத்தினார்கள்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அண்ணா நினைவு நாளில் வாலாஜா சாலையில் இருந்து பேரணியாக நடந்து வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். இப்போது கொரோனா பரவல் உள்ள காரணத்தால் பேரணியாக செல்லாமல் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலந்தூரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்துக்கு காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.