மல்லசமுத்திரம்:-
மல்லசமுத்திரம் அருகே துத்திபாளையம் கிராமத்தில் செங்காலி குட்டை ஏரி 12 ஏக்கர் பரப்பில் உள்ளது. இதில் சுமார் 2 ஏக்கர் நிலத்தை 4 பேர் ஆக்கிரமிப்பு செய்து கரும்பு, நெல் வாழை போன்றவை பயிர் சாகுபடி செய்து வந்தார். இதற்கிடையே ஏரி புறம்போக்கு நிலத்தை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து திருச்செங்கோடு தாசில்தார் அப்பன்ராஜ் முன்னிலையில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. மண்டல தாசில்தார் சக்திவேல், மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன், பரமத்திவேலூர் பொதுப்பணித்துறை என்ஜினீயர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் பரமத்திவேலூர் தாலுகா அ.பொன்மலர்பாளையம் கிராமம் காவிரி ஆற்று பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 20 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.
பள்ளிப்பாளையம் ஒன்றியம் கொக்கராயன் பேட்டையில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்டு இருந்த வாழை, சோளம், தென்னை மரங்கள் அகற்றப்பட்டன. வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இந்த ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.