ஆத்தூர்.
பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமம் வடக்குதெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி லோகநாயகி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் வசந்த் (வயது 20). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கல்லூரி விடுமுறையையொட்டி நேற்று முன்தினம் இரவு வசந்த் ஈரோட்டில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் பெரம்பலூருக்கு வந்து கொண்டிருந்தார். ஆத்தூர் புறவழிச்சாலை தென்னங்குடிபாளையம் என்ற இடத்தில் வந்தபோது புதுச்சேரியில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த வசந்த் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை வசந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவரான சையது முஸ்தபா (41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.