கோவை
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
கொரோனா பரவல் காரணமாக உடல் தகுதி தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்தநிலையில் திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது.
கோவையில் அவினாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ். போலீஸ் மைதானத்தில் உடல் தகுதி தேர்வு நடக்கிறது. இதில் 1000-க்கும் அதிகமானோர் பங்கேற்க உள்ளர்.
இதில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவு மற்றும் உடல் தகுதி ஆகியவை சரிபார்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் காலை 6 மணி அல்லது 9 மணி ஆகிய நேரங்களில் அழைப்பு கடிதத்துடன் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு வர அனுமதி கிடையாது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வுக்கு வருபவர்கள் கட்டாயமாக முககக்கவசம் அணிந்து வரவேண்டும். ஒவ்வொருவரும் அசல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதத்தை W.W.W.tnusrbonline.orgஎன்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உடல்தகுதி தேர்வை முன்னிட்டு கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது.