பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள மருதேபள்ளி கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதற்கு பர்கூர், காவேரிப்பட்டணம், மத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 250 எருதுகள் கொண்டு வரப்பட்டு இருந்தன. இந்த காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
துள்ளிக்குதித்து ஓடிய காளைகளை மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் விரட்டி சென்று பிடித்தனர். அப்போது வாணியம்பாடியை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) உள்பட 25 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த எருது விடும் விழாவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இதில் காளைகளை பிடித்த வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.