மேட்டுப்பாளையம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள புதிய காய்கறி மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இங்கு தினமும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் லாரிகளில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு கய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு முட்டைகோஸ் 20 லாரிகள், கேரட் 25 டன்னில் இருந்து 30 டன், பீட்ரூட் 500 மூட்டை, முள்ளங்கி 100 மூட்டை, பீன்ஸ் 800 மூட்டை, மேரக்காய் 1000 மூட்டை வந்திருந்தது.
இதில் வழக்கத்தை விட கேரட் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வரத்து அதிகரித்ததால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் மார்க்கெட்டுக்கு 10 டன் கேரட் வந்திருந்தது. இதனால் ஒரு கிலோ கேரட் ரூ.70-ல் இருந்து ரூ.90 வரை விற்பனை ஆனது.
இந்த ஆண்டும் நல்ல விலை கிடைக்கும் என்று நினைத்த விவசாயிகள் அதிகளவில் கேரட்டை பயிரிட்டனர். இதனால் கேரட் வரத்து அதிகரித்தது. இதனால் ஒரு கிலோ கேரட் ரூ.15-ல் இருந்து ரூ.25 வரை விற்பனை ஆனது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கேரட்டுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த இரண்டு மாதமாக கேரட்டுக்கு இதே விலைதான் கிடைத்து வருகின்றது. விவசாயம் செய்வதற்கான செலவு மற்றும் லாரிகள் போக்குவரத்து செலவிற்கு கூட போதிய பணம் கிடைப்பதில்லை. இதனால் காய்கறிகளுக்கு உரிய விலையை அரசே நிர்ணயம் செய்யவேண்டும். இல்லையேல் விவசாய தொழிலை கை விட்டுவிடக்கூடிய அபாய சூழ்நிலை ஏற்பட்டு விடும், என்று கவலையுடன் தெரிவித்தனர்.