சங்கரன்கோவில்,
சங்கரன்கோவிலில் 17 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் 17 நாட்கள் கழித்தும் வடகாசியம்மன் கோவில் தெருவில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் நகராட்சி பூங்காவில் உள்ள நீரேற்றும் நிலையம் முன்பு நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர். அதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.