மாவட்ட செய்திகள்

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பஸ்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள், பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செக்கானூரணி,

பஸ்கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்பப்பெற கோரியும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நாகமலைபுதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி முன்பு அந்த கல்லூரியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மதுரை-தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த மறியல், ஆர்ப்பாட்டத்தால் மதுரை-தேனி சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நின்றிருந்தன. இதனால் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மேற்கு தாசில்தார் பாலாஜி, கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் சத்தியேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகன், துணை தலைவர் ராஜா ரஹீம், நகர செயலாளர் மகேஸ்வரன் உள்பட மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநில துணை பொது செயலாளர் கிட்டு சிறப்புரையாற்றினார். முடிவில் நகர தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT