தோகைமலை,
தோகைமலையை சேர்ந்த ஓட்டல் அதிபர் மனோகரன் மற்றும் தோகைமலை வேதாசலபுரத்தை சேர்ந்த பூங்கொடி ஆகியோர் நேற்று முன்தினம் கரூர் கலெக்டர் கோவிந்தராஜிடம் தங்கள் மகன்களை சிலர் கட்டாய மதமாற்றம் செய்து உள்ளதாக புகார் மனு அளித்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜின் உத்தரவின் பேரில், குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் விமல்ராஜ் தலைமையில் தோகைமலை வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் அண்ணாதுரை, தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் தோகைமலையில் பூங்கொடி மற்றும் மனோகரனிடம் நேரில் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மனோகரனின் மகன்கள் 2 பேரும், பூங்கொடியின் மகனும் நேற்று மாலை கரூரில் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தாங்கள் விருப்பப்பட்டே மதம் மாறியதாகவும், எங்களை யாரும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றவில்லை என்றனர். மேலும் மதம் மாறிய விவகாரம் எங்களது பெற்றோருக்கு ஏற்கனவே தெரியும் என்றும், சில அமைப்பினர் தூண்டுதலால் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க வைத்ததாகவும், மதம் மாறியதால் சிலர் எங்களுக்கு மிரட்டல் விடுத்துவருவதாகவும் கூறினர்.