ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை நகரம் மாநில எல்லையில் அமைந்துள்ளது. ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள சோதனைச்சாவடி வழியாகதான் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் சென்னை மற்றும் இதர பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊத்துக்கோட்டை நகர எல்லையில் சுகாதாரத்துறை சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் அங்கு நியமிக்கப்பட்டு, வெளி மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை நகர எல்லையில் நிறுத்தி பயணிகள் யாருக்கேனும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, இருமல், சளி, காய்ச்சல் உள்ளதா என்று மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.
மேலும் வைரஸ் பரவாமல் தடுக்க அங்கிருந்து வாகனங்களின் படிகள், கைப்பிடிகளை வைரஸ் கிருமிகளை கொல்லும் கிருமி நாசினியை பீய்ச்சி அடித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்
ஊத்துக்கோட்டை நகர எல்லைக்கு வந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொரோனா அறிகுறி இல்லை
அப்போது அந்த வழியாக சென்ற பஸ் பயணிகளிடம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முறைகளை பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அப்போது கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் நிருபர்களிடம் பேசும்போது,
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை. இது குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம். இது குறித்து வீண் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது, சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஜவஹர், வட்டார மருத்துவ அலுவலர் பிரபாகரன், சுகாதார மேற்பார்வையாளர் ஜெகன்நாதுலு, சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி, தாசில்தார் சீனிவாசன், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசந்திரபாபு ஆகியோர் உடன் இருந்தனர்.