நாகமலைபுதுக்கோட்டை,
மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இதுவரை சுமார் 70-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களையும் போலீஸ் நிலைய வளாகத்திலேயே நிறுத்தியிருந்தனர். இதனால் அப்பகுதியே இரு சக்கர வாகன காப்பகம் போன்று காட்சியளித்தது. அவற்றை பாதுகாக்க முடியாமல் போலீசார் திணறினர். இது குறித்து நேற்று தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் நாகமலைபுதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பறிமுதல் செய்த வாகனங்களை தற்காலிகமாக அங்கு இடம் மாற்றினர். இதனால் போலீஸ் நிலைய வளாகம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன.