விழுப்புரம்,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அவர்களுடைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று வாக்களிக்க இயலாது என்பதால் தபால் மூலமாக வாக்கு அளிக்க தேர்தல் ஆணையத்தினால் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலர்கள், பல்வேறு குழுக்களில் பணிபுரிபவர்கள், போலீசார்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், டிரைவர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் என அனைவரும் விடுபடாமல் தபால் மூலமாக வாக்கு செலுத்த வேண்டும். இதற்கான உரிய நடவடிக்கைகளை அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சப்-கலெக்டர்கள் சாருஸ்ரீ, ஸ்ரீதர், மெர்சிரம்யா, உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், செங்கல்வராயன் சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் சரஸ்வதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.