தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி அதியமான் அரண்மனை கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன், மாவட்ட பொதுச்செயலாளர் கனகராஜ், மாவட்ட நிர்வாகி கக்கன்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் விஸ்வநாதன் வரவேற்று பேசினார். காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை பிரிவு மாநில தலைவர் சீனிவாசன் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து விளக்கி பேசினார்.
தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் வறட்சியால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு பயிர்காப்பீட்டு தொகையை பெற்றுத்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைநீரை சேகரிக்க ஏரிகள், குளங்கள், தண்ணீர் ஓடும் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், வட்டார தலைவர்கள் காமராஜ், வேலன், பூபதிராஜா, ஜனகராஜ், பிரகாசம், வஜ்ஜிரம், சரவணன், முனுசாமி, சண்முகம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊடகப்பிரிவு அமைப்பாளர் கவுதமன் நன்றி கூறினார்.