மாவட்ட செய்திகள்

ஒரு கோடி ரூபாய் செல்லாத 500, 1000 நோட்டுகள் பறிமுதல் 4 பேர் கைது

ஒரு கோடி ரூபாய் செல்லாத 500 மற்றும் 1000 நோட்டுகளுடன் காரில் வந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உப்பிலியபுரம்,

சேலத்தை சேர்ந்த 3 பேர் நேற்று இரவு ஒரு காரில் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்திற்கு வந்தனர். தனியாக ஒரு காரில் மேலும் ஒருவர் வந்தார். அவர்களது கார்களில் ஏற்கனவே செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் மூட்டை மூட்டையாக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டி வைக்கப்பட்டு இருந்தன.

உப்பிலியபுரம் போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

இதில் உப்பிலியபுரத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் மூலம் மாற்றுவதற்காக அவர்கள் பழைய ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பழைய பாட்டில் வியாபாரியான பன்னீர்செல்வத்திடமும் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது பன்னீர் செல்வம் அவர்கள் 4 பேரையும் போலீசாரிடம் ஒப்படைப்பதற்காக தான் வரவழைத்ததாக கூறி உள்ளார். இதனை தொடர்ந்து 2 கார்களில் வந்த 4 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் உப்பிலியபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT