கலசபாக்கம்,
திருவண்ணாமலை அருகே மேல்பாலானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 55). இவர் துரிஞ்சாபுரம் வட்டார காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். குமார் அவரது நிலத்தில் பயிரிட்டிருந்த மணிலாவை அறுவடை செய்திருந்தார். அவற்றை விற்பனை செய்வதற்காக சரக்கு ஆட்டோவில் ஏற்றி அவலூர்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். அதன் மேல் பகுதியில் குமாருடன் அதே பகுதியை சேர்ந்த நாராயணன் (55), முனிரத்தினம் (40), வெள்ளக்குட்டி (62), டிரைவர் ஆகியோரும் அமர்ந்திருந்தனர்.
ஆட்டோவை டிரைவர் வெங்கடேசன் ஓட்டினார். அவலூர்பேட்டை சாலை விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதில் குமார் உள்பட 5 பேரும் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குமாரை பரிசோதனை செய்தபோது அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.