ஜீயபுரம்,
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கு ப கிருஷ்ணன் நேற்று தொகுதிக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், அங்குள்ள நூர் மஸ்ஜீத் பள்ளிவாசலுக்கு சென்று முஸ்லிம் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார். அதனைத்தொடர்ந்து பெட்டவாய்த்தலையில் உள்ள ஜாமீ ஆ மஸ்ஜீத் சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசலுக்கு சென்று முஸ்லிம் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர்களிடம் தான் வெற்றி பெற்றதும், நீண்ட நாள் கோரிக்கையான முஸ்லிம்களுக்கு அடக்க ஸ்தலத்திற்கு தனி இடம் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
பின்னர் ஜீயபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்யும் 500-க்கும் மேற்பட்ட பெண்களிடம் கலந்துரையாடி ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசுகையில், மறைந்த முதல்-அமைச்சர் விட்டுச் சென்ற பணியை அவரது ஆசிபெற்ற எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வருகிறார். அ.தி.மு.க. அரசு நீர் மேலாண்மையில் முதன்மை பெற்று விளங்குகிறது. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்ததும் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மாற்றி தருவோம், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் 1,500 வங்கிக்கணக்கில் செலுத்துவோம், வருடத்திற்கு 6 கியாஸ் சிலிண்டர் இலவசமாக கிடைக்கும். திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவியை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறினார். அப்போது கட்சியின் ஒன்றிய செயலாளர் அழகேசன், கர்ணன், கோபால், பாரதீய ஜனதா கட்சி மண்டல் தலைவர் ஈஸ்வரன், ஜாகீர் உசேன், உமர், ஹர்ஷத், சாதிக்அலி, முகமது சுல்தான், உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் உடன் சென்றனர்.