பெங்களூரு,
பெங்களூரு நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த அக்டோபர் மாதம் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் பெங்களூரு மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை சேகரிக்கும் பணி நடந்தது.
அன்றைய தினம் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 33.35 டன் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டன. பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என்று சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டு இந்த சாதனையை செய்தனர்.
இதற்கு முன்பு 12 மணிநேரத்தில் அதிகபட்சமாக 28.5 டன் எடை அளவுக்கு மட்டுமே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் சேகரிக்கப்பட்டு இருந்தன. இதனால், பெங்களூரு மாநகராட்சியின் இந்த முயற்சி கின்னஸ் சாதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், 12 மணிநேரத்தில் 33.35 டன் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்த பெங்களூரு மாநகராட்சியின் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழை கின்னஸ் அமைப்பை சேர்ந்தவர்கள், பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத்தை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து வழங்கினர்.