பாகூர்,
புதுச்சேரி அரசின் ஆதி திராவிடர் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் கிருமாம்பாக்கம் கிராமத்தில் ரூ.1 கோடியே 40 லட்சத்தில் நுழைவுவாயில் மற்றும் அம்பேத்கர் முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கி பூமி பூஜை செய்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜவேலுவிடம் அமைச்சர் கந்தசாமி பணிகள் தொடங்குவதற்கு அடையாளமாக செல்கல்லை எடுத்துக்கொடுத்து பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:- கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த உத்திரவேலு எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு மக்களுக்கு பல நலப்பணிகளை செய்தவர். அவர் நமது கிராமத்தை சேர்ந்தவர் என பெருமை கொள்ள வேண்டும். இங்கு அம்பேத்கர் நுழைவுவாயில் அமைய உள்ளது. இதே இடத்தில் உத்திரவேலு சிலையும் வைக்கவுள்ளோம். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. அவரிடம் சிறு வயதிலிருந்து பழகியுள்ளேன்.