ஓட்டப்பிடாரம்,
கோவில்பட்டி புதுரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் வெங்கடேஷ் என்ற சூர்யா (வயது 27) கட்டிட தொழிலாளி. இவருக்கு சுரேஷ் என்ற தம்பியும், ரேவதி மகேஷ் என்ற தங்கையும் உள்ளனர். இவரது பெற்றோர் சிறுவயதிலேயே இறந்து விட்டதால், குடும்ப பொறுப்பை வெங்கடேஷ் கவனித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அந்த பகுதியை சேர்ந்த பாதயாத்திரை குழுவினருடன் சேர்ந்து வெங்கடேஷ் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக சென்றார். அவர்கள் நேற்று காலை 7 மணி அளவில் ஓட்டப்பிடாரத்துக்கு வந்தனர். அங்கு உள்ள தெப்பக்குளத்தில் குளிக்கச் சென்றனர்.
அப்போது வெங்கடேசும் குளத்துக்குள் இறங்கி குளித்து உள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை யாரும் கவனிக்கவில்லை. பின்னர் அனைவரும் புறப்படும் போது, வெங்கடேசை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். குளத்தில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மற்றும் ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு படையினர் குளத்தில் இறங்கி தேடிப்பார்த்தனர். அப்போது குளத்தின் நடுப்பகுதியில் வெங்கடேஷ் இறந்து மூழ்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.